இந்தியாவின் முதல் சிறிய தூர அல்லது உள்ளூர் ரயில் சேவை இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. RAPIDX என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, 17 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதாக அமைகிறது. இதில், சாகிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய், துஹாய் பணிமனை ஆகிய 5 ரயில் நிலையங்கள் இடம் பெற உள்ளன. இவற்றில் ரயில் போக்குவரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், ரயில் சேவைகள் தொடங்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 42 கிலோமீட்டர் தூரத்திற்கான மற்றொரு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இது சாஹிபாபாத் ரயில் நிலையத்திலிருந்து மீரட் தெற்கு ரயில் நிலையம் வரையில் செல்ல உள்ளது. இந்த இரு ரயில் சேவைகளும் முதற்கட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், 25 கிலோ மீட்டர் நீளமுடைய மற்றொரு ரயில் வழித்தடம் நிறைவேற்றப்பட உள்ளதாக ரயில்வே துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது துஹாய் பணிமனையில் இருந்து மீரட் தெற்கு ரயில் நிலையம் வரை இருக்கும் என கூறியுள்ளார்.