கடந்த 21 நாட்களில் மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்ட 1,813 கழிவு நீர் இணைப்புகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட இந்த வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் தொடர்புடையவர்களுக்கு ரூ. 5,98,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.