மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம் அமைப்பதற்கான அடிப்படை ஆய்வு பணிகள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னையில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருவதால் நகரின் பிரதான பகுதிக்கு வெளியில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 2008ல் இதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டாலும் சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் துணை நகர பணிகள் முடங்கின. தற்போது துணை நகரங்கள் அமைப்பது தொடர்பான பணிகளை சி.எம்.டி.ஏ., முடுக்கிவிட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய ஐந்து இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சட்டசபையில் கவர்னர் உரையில் 'மாமல்லபுரம் அருகில் புதிய துணை நகரம் ஏற்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது. புதிய துணை நகரம் அமைய உள்ள பகுதியில் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.