தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளது.
நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியைத் தவிர, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதைத் தவிர்க்கும் வகையிலும், சூரிய சக்திமூலம் மின்னுற்பத்தியை அதிகப்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க ரூ.3.5 கோடி வரை செலவாகிறது.
எனவே, மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 ஆண்டுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.