ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மாற்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது, உலக வரலாற்றில் வெப்பமான ஆண்டாக முதலிடம் வகிக்கும் 2023 ஆம் ஆண்டை விட அதிகமானது.
இந்த அதிகரித்த வெப்பநிலையால் உலகம் முழுவதும் கடுமையான வறட்சி, வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தாலி, நேபாளம், மெக்சிகோ போன்ற நாடுகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உறுதிமொழி அளித்திருந்தாலும், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.