ஏமனில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர். படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














