இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து வைத்திருந்த 21 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் தேதி 64 மீனவர்களை கைது செய்து 10 படகுகளை பறிமுதல் செய்தது. இவர்களை உடனடியாக விடுவிக்க தமிழக முதலமைச்சர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து கடந்த 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக 4 மற்றும் 38 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மூன்றாவது கட்டமாக சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீதமுள்ள ஒருவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பின்னர் மீண்டும் எல்லை தாண்டினால் ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.