சபரிமலை மண்டல பூஜையில் பங்கேற்க வந்த ஐயப்ப பக்தர்கள் 24 பேர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த விழாவுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 27-ந் தேதி வரை 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். இந்த நாட்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சபரிமலை சென்ற பக்தர்கள் சுமார் 1,20,000 பேர் இந்த சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் இதய நோய் பாதிப்புக்கு மட்டும் 18, 888 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் மாரடைப்பு பிரச்சினை ஏற்பட்டு 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.