தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒவ்வாரு அரசியல் கட்சியும், தங்களது பெயர், தலைமை அலுவலகம், நிர்வாகிகள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் மாற்றம் செய்தால் அதை தேர்தல் ஆணையத்துக்கு தாமதமின்றி தெரிவிக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள் தங்களது பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, செலயற்றதாக உள்ளன. அந்த கட்சிகளின் செயல்பாடு குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 86 அரசியல் கட்சிகள் தங்களது முகவரியில் இல்லை.
இவ்வாறு பிஹார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 253 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கடிதங்களுக்கு பதில் அளிக்காமலும் இருந்துள்ளன. இந்த கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவற்றின் சின்னங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் தேசியக் கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி உட்பட 14 கட்சிகளை செயலற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.