பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இன்று 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஜன.13-ம் தேதியே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினர். அவர்களின் வசதி கருதி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊர் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கமானது நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையைப் பொருத்தவரை நேற்று அதிகாலை முதல் பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இவ்வாறு நேற்று காலை சென்னை திரும்பியவர்களின் வசதிக்காக கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.
இன்றைய தினமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1206 பேருந்துகள், சென்னையைத் தவிர்த்து இதர இடங்களுக்கு 1399 பேருந்துகள் என 2605 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.