மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மாதம் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன. அதைத் தொடர்ந்து, பல்வேறு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று பழங்குடியின சமூகத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், நேற்று மீண்டும் வன்முறை தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கங்சூப் என்ற பகுதியில், நேற்று ஏற்பட்ட வன்முறையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.
அதே வேளையில், மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு, மலைகள் மற்றும் பள்ளத்தாக்கில் உள்ள கலகக்காரர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எல்லை பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் படை, மத்திய ஆயுதப்படை மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் ஆகியோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கலகக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.