ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக, 700 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அருகே, சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள தொழிற்சாலை மூலம், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கருதப்படுகிறது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியூ தலைமையில், பெங்களூரு வந்துள்ள குழு ஒன்று, கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி. என். அஸ்வத் நாராயணனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தொழிற்சாலை அமையவுள்ள பகுதியை ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாக்ஸ்கான் தொழிற்சாலை அமையவுள்ள தகவலை உறுதி செய்துள்ளனர்.