பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது 37 ஆண்டுகளாக லஞ்ச குற்றச்சாட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த வழக்கிலிருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1986 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரிப் இருந்து வந்தார். அந்த சமயத்தில், அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தை, அதன் மதிப்பை விட குறைவான விலைக்கு, ஜாங் ஜியோ ஊடகக் குழுமத்தின் உரிமையாளர் ஷகில் உர் ரஹ்மானுக்கு இவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 37 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த லாகூர் நீதிமன்றம், சனிக்கிழமை அன்று அவருக்கு வழக்கிலிருந்து விடுதலை வழங்கியுள்ளது. அண்மையில், பாகிஸ்தானில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் படி, இந்த வழக்கு, ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையின் கீழ் வராது என்று தெரிவிக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சட்ட திருத்தம் அவரது இளைய சகோதரரும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமருமான சபாஷ் ஷெரிப் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தற்போதைய நிலையில் பிரிட்டனில் இருக்கும் நவாஸ் ஷெரிப், விரைவில் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.