‛5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் திங்கள் அன்று முடிவு பெற்றது. இதன் அடுத்தகட்டமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கும் என, தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், 1.5 லட்சம் கோடி ரூபாயுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஏலம் எடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை செலவு செய்துள்ளன. நிறுவனங்கள், அந்த செலவை ஈடுகட்டும் விதமாக, தொலைபேசி மற்றும் பிராட்பேண்டு சேவைகளுக்கான கட்டணத்தை, மீண்டும் ஒருமுறை அதிகரிக்க கூடும்.
5 ஜி சேவை அறிமுகமாகிய பின், திடீரென்று கட்டணம் உயர்த்தபட்டால் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த தயக்கம் காட்டுவார்கள். இதனால், தற்போது சேவையில் இருக்கும் 4ஜி இணைப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சிக்கும். பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இல்லை என்றால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் 5ஜி சேவைக்கு மாற முன்வருவர்.
கட்டண உயர்வை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான்கு சதவீத உயர்வை நிறுவனங்கள் அறிவிக்க கூடும். அல்லது, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி., 4ஜி இணைப்புக்கான கட்டணத்தில், 30 சதவீத உயர்வை அறிவிக்க கூடும். நிறுவனங்களை பொறுத்து, கட்டண உயர்வு குறித்த முடிவுகள் வேறுபடக்கூடும். ஆனால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.