அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு போலீசார் பலியாகினர்.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் சாரலோட்டி நகர் உள்ளது. இங்கு உள்ள ஒரு குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குடியிருப்பு பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு உள்ள ஒரு வீட்டில் சோதனை நிகழ்த்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நபர்கள் திடீரென்று போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதையடுத்து போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. முடிவில் நான்கு போலீசார் பலியாகினர். ஐந்து போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒரு நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.