அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ராஜா கிருஷ்ணமூர்த்தி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான 'ரேங்கிங்' உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும். அமி பெரா, முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுதான் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ), தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம் (டி.என்.ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மற்றும் ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும்.
பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் 'ரேங்கிங்' உறுப்பினராக (குடியேற்றம்) நியமிக்கப்பட்டுள்ளார். குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமை தாங்குவார். ரோகன்னா, சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.