ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடையில் இந்தியாவிலும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இதில் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் தொடர்ந்து அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இந்த வாரம் முழுவதும் வழக்கத்தை விட அதிக அளவு வெப்பம் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோன்று ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு 159 பேரின் இறப்பிற்கு வெப்ப அலை காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. அதில் 41 பேர் இறப்பிற்கு கோடை வெப்பமே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது