சென்னை பெருநகர வளர்ச்சி குழும சார்பில் 5 பேருந்து நிலையங்கள் மொத்தம் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதியில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், மாநகர பேருந்து நிலையங்களை தரம் உயர்த்துவது தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட், பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகர் ஆகிய 5 மாநகர பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த 5 பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்கும் தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் (மொத்தம் ரூ.25 கோடி) நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையமாக மேம்படுத்துவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.