ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வாகனம் தீப்பிடித்து ஐந்து வீரர்கள் பலியாகினர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இங்குள்ள முகாம்களில் இருந்து பணி செய்யும் இடங்களுக்கு ராணுவ வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் கலியில் இருந்து சங்கியாட் பகுதிக்கு வீரர்களுடன் ராணுவ வாகனம் நேற்று சென்றது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.