தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி 29 சுங்கச் சாவடிகளிலும், செப்டம்பர் 1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்ட அமலாக்கப் பிரிவு சார்பில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவீதமும் கட்டண உயர்வு அமலாகும் என தெரிகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்கள் ஒருவழிப் பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். சென்னையில் இருந்து மதுரை, கோவை, போன்ற நகரங்களுக்கு செல்ல ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.