அரசு விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு, மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 6-வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென தனியாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும். போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணிமனைகளில் உள்ள பணியாளர் ஓய்வு அறைகளுக்கு ஏசி வசதி ஏற்படுத்தப்படும். அரசு விரைவுபோக்குவரத்துக் கழக பேருந்துகளில் உள்ள பார்சல் பெட்டிகள், மாதம் ரூ.6 ஆயிரத்துக்கு வாடகை அடிப்படையில் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.














