கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கலில் நீர்வரத்து 5000 கன அடியாக நீடித்து வருகிறது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் நீடித்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழைகளின் காரணமாக அணைகள் தொடர்ந்து நிரம்பி வருவதால் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.