மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த 3-ம் தேதி மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. ராணுவம், துணை ராணுவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 45,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் மீண்டும் வாழ முடியாது என்ற சூழ்நிலையில் குக்கி, சின், மிசோ சமுதாயங்களை சேர்ந்த 5,822 பேர் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மிசோரமின் 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் உள்ளனர். மணிப்பூருக்கு திரும்பிச் செல்ல அவர்கள் மறுத்து வருகின்றனர்.