இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் கூறுகையில், 5ஜி சேவையை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி ஆகிய 8 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளோம். 5ஜி இணைப்புக்கான கட்டமைப்புகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு பிற நகரங்களிலும் இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 5ஜி அதிவேக இணைய சேவை அனுபவத்தை 4ஜி சிம் கார்டு வழியாக தற்போதுள்ள திட்டத்தின் மூலமாகவே பெறலாம். இதற்காக, கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறுகையில், இந்திய தொலைத் தொடர்புத் துறை வரலாற்றில் புரட்சிகளை ஏற்படுத்துவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 5ஜி ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் தற்போதைய சிம் வழியாகவே இந்த சேவையினை பெற்று மகிழலாம். இந்தியாவின் பொருளாதார சேவைகள், கல்வி, சுகாதாரம், உற்பத்தி, வேளாண்மை மற்றும் சரக்குப் போக்குவரத்தில் 5ஜி சேவை மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வரும் நவம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவை 2023 ஆகஸ்ட் 15-லிருந்து அறிமுகப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.