தலைநகர் புதுடெல்லியில், மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய செல்லுலர் ஆப்ரேட்டர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ மாநாடு இன்று தொடங்கவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை துவக்கி வைக்கிறார். வரும் அக்டோபர் 4ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் துவக்க விழாவில், இந்தியாவின் 5ஜி தொழில்நுட்ப சேவையையும் பிரதமர் துவக்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
நாட்டின் 5ஜி சேவை குறித்து, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "முதற்கட்டமாக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில், மற்ற நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும். இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் உந்துசக்தியாக 5ஜி தொழில்நுட்பம் திகழ்கிறது. புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், ‘டிஜிட்டல் இந்தியா’ இலக்கை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்டதாகவும் உள்ளது. வரும் 2035-ல், 5ஜி மூலமான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 450 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4ஜியை விட பத்து மடங்கு வேகமாக இருக்கும் 5ஜி தொழில்நுட்பம் மூலம், இ-காமர்ஸ், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று கருதப்படுகிறது. மேலும், மெட்டாவர்ஸ் உருவாக்கத்தில் 5ஜியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில், ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு 5ஜி சேவையை வழங்க உள்ளன.
இந்நிலையில், 5ஜி சேவை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சிறப்பான சிக்னல் வலிமை, தடையற்ற இணைப்பு, மிக விரைவான டேட்டா வேகம் உள்ளிட்டவற்றை வழங்கும் 5ஜி சேவையை, டெர்மினல்-3 மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.