இந்தியாவில், ஐபோன் 12 பின் உள்ள அனைத்து ஐபோன் மாடல்களிலும், நேற்று இரவு 11:30 மணி முதல், 5ஜி சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன்களில், ஜியோ மற்றும் ஏர்டெல் சிம் கார்டு உள்ளவர்கள், 5ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ள நகரங்களில் 5ஜி சேவையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ios 16.2 என்ற புதுப்பித்தல் மூலம், ஆப்பிள் நிறுவனம் இதனை வழங்கியுள்ளது. இதனுடன் இணைந்து, புதிதாக பிரீ பார்ம் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நேரடியாக கைகளை கொண்டு எழுதவோ வரையவோ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆப்பிள் மியூசிக் சிங்க் என்ற கரோக்கே வகை செயலியும், நமது இடத்தை செயற்கைகோள் மூலம் காட்டும் எஸ் ஓ எஸ் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, மேம்படுத்தப்பட்ட லாக் ஸ்கிரீன், நோட்டிபிகேஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கேம் சென்டர், ஸ்லீப், மெடிகேஷன் விட்ஜெட், ஐ கிளவுட், கிராஷ் டிடெக்ஷன் போன்ற வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ஏர் டிராப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு டேட்டா பகிரும் நேரம் 10 நிமிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.