ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983-ன் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வருடமும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்த காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்கு செல்லக்கூடாது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலைமையில் கடலுக்குள் சென்றுள்ள மீன்பிடி படகுகள் அனைத்தும் ஏப்ரல் 14 இரவு 12 மணிக்கு முன் கரை திரும்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.