5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் 6ஜி அலைக்கற்றை சேவை குறித்த முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு 10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. இந்த ஏலத்தின் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடியாகும்..
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது. இதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஏலம் நிறைவடைந்துள்ளதால் விரைவில் முக்கிய நிறுவனங்கள் 5ஜி சேவையை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ தொடக்க நிகழ்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை நாட்டில் தொடங்கப்படும். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு இன்னும் 4ஜி சேவையே வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














