அரசு கலைக்கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் கல்வித்தரம் எப்படி உயரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நடப்பாண்டில் முதலாமாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 70 விழுக்காடு ஆகும். இப்படி இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.














