இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து மக்கள் பயன்படுத்துவார்களா என்பதை அறிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், 73% பேர் பயன்பாட்டை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற இணைய வழி கருத்து கேட்பு நிறுவனம் யு பி ஐ பரிவர்த்தனைகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், 364 மாவட்டங்களைச் சேர்ந்த 34000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அதில் 67% ஆண்கள் மற்றும் 33% பெண்கள். கருத்துக்கணிப்பில், கடந்த ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்தி உள்ளதாக 37% பேர் தெரிவித்துள்ளனர். அத்துடன், 73% பேர், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டால் பயன்பாட்டை நிறுத்துவதாக கூறியுள்ளனர். மேலும், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் இரண்டில் ஒருவர் மாதத்திற்கு 10 க்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.