இஸ்லாமிய நாடான ஏமனில், ரமலான் தினத்தை ஒட்டி, தனியார் நிறுவனம் சார்பில், நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், நன்கொடைகள் மற்றும் உதவிப் பொருட்களை பெறுவதற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த சோக சம்பவத்தில், 322 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே, பெரும்பாலான மக்களுக்கு நன்கொடைகள் மற்றும் உதவிகள் அவசியமாக தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் நிகழ்வில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடைகளை பெற முயன்ற போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில், குழந்தைகள் மற்றும் பெண்கள் அனேகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.