ஐரோப்பிய நாடுகளில், கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால், சுமார் 15,000 பேர் உயிரிழந்து உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. மேலும், கடந்த 40 ஆண்டுகளில், ஐரோப்பாவில், வெப்பத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 1.29 லட்சமாக பதிவாகியுள்ளது. எனவே, தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல், வெப்ப அலை ஏற்படும் சூழலை அதிகரிக்கிறது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், வெப்ப அலை காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு 90000 ஆக உயரும் என்று ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது, உலகளாவிய வெப்ப நிலையில் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், 2100 இல், வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். எனவே, உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை உணர்த்துகிறது. மேலும், உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அனைத்து உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்று அந்த அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.