சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் 91.8 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11, 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக 5 ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10,793 மி.கனஅடி தண்ணீர் இருப்புள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 சதவீதம் ஆகும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் 550 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரித்து வருகிறது.