ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எழுத்து பதிவின் உச்சவரம்பை 1000 எழுத்துக்களாக உயர்த்தும் திட்டம் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் தற்போது எழுத்து பதிவுகளின் உச்சவரம்பு 280 எழுத்துக்களாக உள்ளது. இந்நிலையில், அதனை 1000 எழுத்துக்களாக உயர்த்த பயனர் ஒருவர் எலான் மஸ்க்குக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், இந்த முடிவு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு, 140 எழுத்துக்களில் இருந்து 280 எழுத்துக்களாக ட்விட்டர் பதிவுகளின் வரம்பு உயர்த்தப்பட்டது. இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால், அதே வேளையில், எழுத்து வரம்பு தான் ட்விட்டரை மற்ற சமூக தளங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும் அம்சமாகும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், வரம்பு உயர்த்தப்படுவது உறுதியாகி உள்ளது.