யாழ்ப்பாணம்-சென்னை இடையே அடுத்த வாரம் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று இலங்கை மந்திரி தெரிவித்தார்.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனம், சென்னை-யாழ்ப்பாணம் இடையே 3 வாராந்திர விமானங்களை இயக்கி வந்தது. இருப்பினும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
2020-ம் ஆண்டு கொரோனா பரவலால் விமான போக்குவரத்து மேலும் சீர்குலைந்தது. இந்த நிலையில், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குகிறது. இதுகுறித்து இலங்கை விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா நாடாளுமன்றத்தில் கூறியதாவது - யாழ்ப்பாணம்-சென்னை இடையே அடுத்த வாரம் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குகிறது. அநேகமாக, 12-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்கப்படலாம். தற்போது, ஓடுபாதையில் சில பணிகள் உள்ளது. தற்போதைய நிலையில், அந்த ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே இயக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.