மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. திட்ட பயனாளிகளில் 4.13 கோடி பேர் கடும் விலை ஏற்றத்தால் ஒரு முறை கூட ‘சமையல் எரிவாயுவை’ விலை கொடுத்து வாங்கவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அவர்கள் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. மேலும் மலைகிராம மக்களுக்கு சரியான முறையில் விநியோகம் செய்வதும் இல்லை.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, ‘கடந்த மே 21ம் தேதி முதல் 2022-23 நிதியாண்டில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களுக்கு மாதம் ரூ.200 என மானியம் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 9 கோடி பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டது.
2017-18ம் ஆண்டில் 46 லட்சம் பயனாளிகளும், 2018-19ம் ஆண்டில் 1.24 கோடி பேரும், 2019-20ல் 1.41 கோடி பேரும், 2020-21ல் 10 லட்சம் பேரும், 2021-22ல் 92 லட்சம் பேரும் உள்ளனர். மொத்தமுள்ள 9 கோடி பயனாளிகளில் 4.13 கோடி பேர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்காதது, இத்திட்டதில் உள்ள பின்னடைவை காட்டுகிறது.