மனித மூளை திசுக்களை உண்ணும் அமீபாவால், 50 வயது மதிக்கத்தக்க தென்கொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்தில் வசித்து வந்த அவர், நெக்லேரியா ஃபோலேரி என்ற அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிகவும் அரிய வகை மூளைக்காய்ச்சல் என்பதால் இதற்கான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமீபா நோய் பாதிப்பு குறித்து, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதாவது: “நெக்லேரியா அமீபா வகை ஏரி மற்றும் ஆறுகளில் காணப்படும். இது மனிதர்களின் மூக்கு வழியாக நுழைந்து, மூளைக்கு சென்று மூளை திசுக்கள் மற்றும் நரம்புகளை தாக்குகிறது. மூளையில் Primary amebic meningoencephalitis என்ற தொற்றை ஏற்படுத்துகிறது. இது மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானதாகும். இந்த நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள்: முன் தலைவலி, காய்ச்சல், வாந்தி. நோய் தீவிரமடையும் பொழுது, வலிப்பு, மாறுபட்ட மனநிலை, பிரமை, கோமா போன்றவை ஏற்படலாம். இந்த நோயால் அமெரிக்காவில் 154 பேர் பாதிக்கப்பட்டு, வெறும் 4 பேர் மட்டுமே பிழைத்துள்ளனர்” என்று கூறியுள்ளது.