இந்தியாவுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு பீப்பாய் ரஷிய எண்ணெயிலும் ‘உக்ரேனிய ரத்தம்’ உள்ளது என்று உக்ரைன் அமைச்சர் குலேபா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஆறு மாதமாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா புதன்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் , உக்ரைனுடனான மாஸ்கோவின் தற்போதைய போருக்கு மத்தியில், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதாக விமர்சித்தார்.
இதற்கிடையில், 9-வது இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை பாங்காக் வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை இந்திய சமூகத்தினரைச் சந்தித்த நிகழ்வில் பங்கேற்றார். அப்போது அவர் இதற்கு பதில் அளித்துள்ளார்.
தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆதரித்தார். இந்தியாவில் உள்ள மக்களுக்கு சிறந்த வணிக ஒப்பந்தம் கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை மற்றும் "தார்மீக கடமை" என்று கூறினார்.
பிப்ரவரி 24 அன்று மாஸ்கோ உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பியதிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.
உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கு நாடுகளின் விமர்சனங்களையும் மீறி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா உயர்த்தியுள்ளது.
ரஷியாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் இருந்து 50 மடங்கு உயர்ந்துள்ளதாக ஜூன் மாதம் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மே மாதம், எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா சவுதி அரேபியாவை முந்தியது. ஈராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சப்ளையர் ஆனது. உக்ரைனில் நடந்த போரைத் தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் குறைவான விலையில் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கிடைத்தன.
இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மே மாதத்தில் சுமார் 25 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.