அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையிலான சூரிய புயல்கள் பூமியை தாக்கி வருகின்றன. சூரிய புயல் தாக்குதல் சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரம் வரை நிகழக் கூடும். இதனால், பூமியில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்படையும். இந்நிலையில், சூரிய புயல்கள் குறித்து முன்கூட்டியே அறிய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சூரிய புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
நாசா, சூரிய இயக்கம் குறித்த ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறது. அதில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சூரிய வளிமண்டலத்தின் மேற்பரப்பில் குறிப்பிட்ட சிக்னல்களை கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம், எந்தெந்த சூரிய கரும்புள்ளிகள் வெடிக்க சாத்தியமுள்ளது என்பதை அறிய முடியும் என தெரிவித்துள்ளனர். "பெரிய அளவிலான கரும்புள்ளி வெடிப்பு ஏற்படுவதற்கு முன்னர், சிறிய பொறி இந்த மேற்பரப்பில் ஏற்படுகிறது. ஒவ்வொரு கரும்புள்ளி வெடிப்பிற்கும் இவ்வாறு பொறி தோன்றுகிறது. எனவே, இந்த பொறியை ஆய்வு செய்வதன் மூலம், சூரிய புயலின் தாக்கம் குறித்து அறிய முடியும்" என தெரிவித்துள்ளனர். இது, சூரிய புயல் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.