ஆப்கானிஸ்தானில், கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள குளிர் அலையால் பாதிக்கப்பட்டு, இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சுமார் 10 லட்சம் மக்களுக்கு உணவு மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருவதாக தாலிபான் அரசின் தேசிய இயற்கை பேரிடர் மேலாண்மை துறையின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா ரஹீமி தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், குளிரை சமாளிக்க விறகுகள் இன்றியும், ஹீட்டர் இன்றியும் தவித்து வருகின்றனர். மற்றும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்கள், குளிரை தாக்கு பிடிக்க, போர்வைகள் கூட இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தேவையான உதவிகளைச் செய்யுமாறு பொதுமக்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.