சீனாவில், கடந்த டிசம்பர் மாதம் முதல், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், தினசரி கொரோனா மரணங்களில் 80% சரிவு பதிவாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி நீக்கப்பட்ட பின்னர், கொரோனா அலை ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரையில், சுமார் 13,000 பேர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்று சீனா அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய நாட்களில் 60000 ஆக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை அன்று, தினசரி கொரோனா மரணங்கள் 896 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஜனவரி 4ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 79% குறைவாகும். மேலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36000 ஆக குறைந்துள்ளது. இது ஜனவரி 5ஆம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 72% சரிவாகும். சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்ததால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.