டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தொடர்ந்து கடந்த 7 காலாண்டுகளாக சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த காலாண்டில், நிறுவனம் 3043 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் கிடைத்தது, செமி கண்டக்டர் சிப் விநியோகம் அதிகரித்தது, மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்தது, ஆகியவை நிறுவனத்தின் லாபத்திற்கு வழி வகுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி பி பாலாஜி, "டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் வர்த்தகம் மிகவும் லாபகரமானதாக அமைந்துள்ளது. டாடா மோட்டார்சின் ஒட்டுமொத்த வருவாயில் 67% ஜாகுவார் லேண்ட்ரோவர் மூலம் கிடைத்துள்ளது. ஜாகுவார் லேண்ட்ரோவர் காருக்கு 215000 ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இது முந்தைய காலாண்டை விட 10000 எண்ணிக்கையில் கூடுதல் ஆகும்" என்று கூறியுள்ளார். கடந்த காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 22.9% உயர்ந்து 89618 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செலவினங்கள் 17.4% உயர்ந்து, 86415 கோடியாக பதிவாகியுள்ளது.