இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் டிஜிலாக்கர் தொடர்பான அறிவிப்புகள் கவனம் ஈர்த்துள்ளன. தனிநபர் ஒருவர் கூடுதல் ஆவணங்களை சேகரிக்க வகை செய்யும் படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் துறைக்கான அறிவிப்புகள் படி, "வருங்கால டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கேஒய்சி அமைப்பை முழுவதுமாக மாற்றம் செய்யும் முறை கொண்டு வரப்படும்" என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், பேன் கார்டு பொதுவான அடையாள அட்டையாக கருதப்படும் என தெரிவித்தார். இதன் மூலம், "நிதி சார்ந்த பல்வேறு பல்வேறு சேவைகளுக்கு, அடையாள சான்று, முகவரி சான்று போன்ற அனைத்துக்கும் பான் கார்டு மட்டுமே போதுமானதாக இருக்கும். இதனை டிஜிலாக்கரில் சேமிப்பதன் மூலம், ஆதார் அட்டை மற்றும் இதர நிதிசார் ஆவணங்கள் பாதுகாப்பாக ஆவணப்படுத்தப்படும்" என்று கூறினார். மேலும், எளிய மனிதர்களின் டிஜிட்டல் நிதி தொடர்பான அனைத்து சேவைகளும் டிஜிலாக்கர் மூலம் எளிமையாக்கப்படுவதாக கூறினார்.