ராமர்சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடாவை இணைக்கும் ராமர்சேது பாலம் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தற்போது ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஅரசு தரப்பில் , இந்த மனு தொடர்பாக ஆய்வுகள் செய்ய வேண்டி இருப்பதால் காலஅவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் ராமர்சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டனர்.