ஜொமாட்டோ நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வருவாய் 75% உயர்ந்து, 1948 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் நஷ்டம் 5 மடங்கு உயர்ந்து, 346 கோடியாக பதிவாகியுள்ளது. ஜொமாட்டோ நிறுவனம், 'பிலிங்கிட்' என்ற துரித வர்த்தக தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அதனைத் தவிர்த்து, ஜொமாட்டோ நிறுவனத்தின் EBITDA 38 கோடி ரூபாய் இழப்பை பதிவு செய்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பின் ஜொமாட்டோ நிறுவனத்திற்கு உணவு ஆர்டர் எண்ணிக்கை சரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அக்ஷாந்த் கோயல், "நாடு தழுவிய முறையில் உணவு விநியோக வர்த்தகத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் மட்டும் தொடர்ந்து ஆர்டர்கள் சரிவடையாமல் உள்ளன" என்று கூறினார். மேலும், இந்த மந்த நிலை தற்காலிகமானது எனவும், உணவு விநியோக வர்த்தகம் நீண்ட நாட்களுக்கு சிறப்பாகச் செயல்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.