டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று சந்தித்து பேசினார்.
பிடிஐ சர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஏடிபி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு ஏடிபியின் உதவி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்தியாவுக்கான நிதியுதவி திட்டத்தை ஏடிபி இறுதி செய்துள்ளது.
பிரதமரின் கதி சக்தி திட்டம், எதிர்கால நகரங்களை உருவாக்குதல், உள்நாட்டு வளங்களை திரட்டுதல், பின்தங்கிய மாவட்டங்களில் அடிப்படை சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்கு ஏடிபி ஆதரவு அளிக்கும். இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 25 பில்லியன் டாலர் (ரூ.2.07 லட்சம் கோடி) கடனுதவி வழங்க ஏடிபி முன்வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் மசட்சுகு அசகாவா எடுத்துரைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.