சென்னையில் உள்ள ஐந்து இடங்களில் புதிய துணை நகரங்களை உருவாக்குவதற்கான தொடக்க பணிகளை சி.எம்.டி.ஏ தொடங்கியுள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமைத் திட்டம், கடந்த 2008ல் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை பெருநகரில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் புதிய நகரங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிப்பதற்கான வழிமுறைகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறுகையில், முதலாவது முழுமைத் திட்ட அடிப்படையில் மறைமலைநகர், மணலி ஆகிய இடங்களில் துணை நகரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் மறைமலை நகர் , மணலி துணை நகர திட்டத்தில், நிலங்கள் முறையாக கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதனால் புதுநகர் திட்டம் பாதியிலேயே காணாமல் போய்விட்டது. இதேபோல் திருமழிசையிலும் துணை நகர திட்டம் முழுமை பெற முடியாமல், 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், புதுநகர் வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்க, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதுநகர் வளர்ச்சித் திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்ட தொகுப்பு குடியிருப்புகள் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.