அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து , நேற்று ராகுலை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், ராகுல்காந்தி போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது. ஆகையால் தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.