இந்தியாவின் நேரடி வரி வசூல் 20 லட்சம் கோடி என்ற இலக்கை நெருங்குவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த வருடத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 19.68 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் 22% உயர்வை பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, நேரடி வரி வசூல் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பிச் செலுத்தப்பட்ட வரிகளை கழித்து, மொத்த நேரடி வரி வசூல் 16.61 லட்சம் கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் 14.12 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இது 17.63% உயர்வாகும். கடந்த நிதி ஆண்டில் திருப்பிச் செலுத்தப்பட்ட வரித் தொகை 307352 கோடி அளவில் உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 37.42% உயர்வாகும்.














