கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, பயணி ஒருவர் தீ வைத்த சம்பவம் நேர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணி அளவில், டி1 பெட்டியில் பயணம் செய்த நபர், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சக பயணிகள் மீது ஊற்றி தீ வைத்தார். பயணிக்கள் ஆடையில் தீப்பற்றிக் கொள்ள, சகப் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். அதன் பிறகு, காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்-ல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ வைத்த நபர் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியதாக தகவல் வெளிவந்தது.
மேலும், சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் சடலங்கள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, ரயில்வே காவல்துறையினர் மற்றும் கேரள காவல் துறையினர், சிசிடிவி ஆதாரம் மற்றும் பயணிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். குஜராத் ரயில் விபத்தை போலவே இங்கும் அரங்கேறி உள்ளதால், தீவிரவாத தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீ வைத்ததாக சந்தேகப்படும் நபர் ஒருவரை, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழு கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கைது செய்யப்பட்ட அவர், விரைவில் கேரள காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.